Monday 5 September 2011

இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு நிதியுதவி!

வேலூர்: இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமுதாயத்தவருக்கு அரசு நிதியுதவி வழங்கப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்தவர்கள் மற்றும் உடல், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வழிவகை செய்யும் பொருட்டு சிறு வணிகம் செய்ய நிதியுதவியாக ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் :இனக் கலவரங்களால் உடல் உழைப்பு செய்ய இயலாத வகையில் ஊனமுற்றிருந்தால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். பெருங்குற்றங்களாக கருதப்படும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாதவராகவும், முதன் முதலாக சிறு குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து மீண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவராய் இருப்பின் மாவட்ட அரசு மருத்துவரிடமும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பின் பொருள் இழப்பீட்டுச் சான்று தாசில்தாரிடமும் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சிறு குற்றங்கள் செய்திருப்போர் மற்றும் தண்டனை பெற்றிருப்போரின்ஆண்டு வருமானம் நகர்ப்புறங்களில் 36 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறங்களில் 24 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். சிறைத்தண்டனை அனுபவித்தவராக இருந்தால் தடை செய்யப்பட்ட எந்தவொரு அமைப்பின் உறுப்பினராகவோ முனைப்பான பங்கேற்பாளராகவோ இல்லாமல் இருத்தல் வேண்டும்.
மேலும் எந்தவொரு குற்ற வழக்கும் நிலுவையில் இல்லாமல் இருத்தல் வேண்டும். என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.